search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாலக்கோடு அருகே தவறான சிகிச்சையால் வாலிபர் மரணம்- 2 டாக்டர்கள் கைது

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தவறான சிகிச்சையால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி வலகாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மாரண்டஅள்ளியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு உடல் நிலை குணம் ஆகாததால் அதே பகுதியில் உள்ள மற்றொரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் தான் வாலிபர் கார்த்திக் பலியானார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் , இறந்த கார்த்திக் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திக் உடல் உறுப்புகளை எடுத்து ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபர் கார்த்திகைக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து ஹோமியோபதி மருத்துவர்கள் கோவிந்தராஜ் (45) சந்தோஷ்குமார் (35) ஆகிய இருவரையும் மாரண்டஅள்ளி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து பாலக்கோடு வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் டாக்டர்கள் இருவரும் நடத்தி வந்த கிளினிக்களுக்கு சீல் வைத்தனர்.

    தவறான சிகிச்சையால் வாலிபர் பலியான நிலையில் 2 டாக்டர்கள் கைதான சம்பவம் மாரண்டஅள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×