search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையில் ஈடுபட்ட அருண்குமார்.
    X
    கொள்ளையில் ஈடுபட்ட அருண்குமார்.

    திருப்பூரில் பெண்ணிடம் ரூ.11 லட்சம் பறித்த கொள்ளையன் கைது

    திருப்பூர் வடக்கு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மகேந்திரன், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
     திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூரை அடுத்த முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 45).தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் நிலத்தை பத்திர பதிவு செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அவரது மனைவி தேன்மொழியுடன் (36) சென்றார். அப்போது ரூ.11 லட்சத்து 12 ஆயிரத்தை பையில் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றனர்.

    ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய முடியாததால் இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டனர். கேத்தம்பாளையம் அருகே  செல்லும் போது அவர்களுக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென தேன்மொழி கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். 

    இதையறிந்த திருப்பூர் வடக்கு மாநகர உதவி போலீஸ் கமிஷனர் மகேந்திரன், அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தேன்மொழியிடம் இருந்து பணப்பையை பறித்துச் சென்ற வாலிபர் அந்த  பையை மோட்டார்சைக்கிளின் முன்புறம் வைத்துக்கொண்டு கேத்தம்பாளையம் வழியாக சென்றது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவு படி குற்றப்பிரிவு துணை கமிஷனர் ரவி நேரடி மேற்பார்வையில் கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். 

    இந்தநிலையில் இன்று காலை கொள்ளையில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த அருண்குமார்(25)  என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.9லட்சத்தை  போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மேலும் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து  அவரிடம் போலீசார் தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×