search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    ஆசிரியர்கள் கண்டிப்பதை எண்ணி மாணவர்கள் வருத்தப்படக்கூடாது- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இன்றைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகி தனது கரங்களால் நல்லாசிரியர்களுக்கு விருதுகளை வழங்குவது பெருமையாக இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
    திருச்சி:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் தினம் குறித்து கூறியதாவது:-

    நமக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களில் அனுபவ பாடங்களை தருபவர்கள் அனைவரையுமே நான் ஆசிரியராக பார்க்கிறேன். நான் தொடக்கப்பள்ளியில் பயின்றபோது, ஜெயந்தி என்ற ஆசிரியை எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தார்.

    அதேபோன்று ஈ.ஆர். மேல்நிலைப்பள்ளியில் பயின்றபோது, அந்த பள்ளியின் தாளாளரும், ஆங்கில ஆசிரியருமான டி.எம்.எஸ்., அவரின் சசோதரர் உள்ளிட்ட ஆசிரியர்களை என்னால் மறக்க இயலாது. அவர்கள் என்னை தங்கள் வீட்டுப்பிள்ளையாக பார்த்துக்கொண்டார்கள்.

    அதேபோல் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ. பட்டப்படிப்பு படிக்கும் காலங்களில், ஒவ்வொரு ஆசிரிய பெருமக்களும் எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்தார்கள். நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்கள் ஏணிப்படியாக இருக்கிறார்கள். பெற்றோரை தவிர்த்து அதிக நேரம் பள்ளிகளிலேயே குழந்தைகள் இருக்கிறார்கள். ஆகவேதான், ஆசிரியர்களை இரண்டாம் பெற்றோர்கள் என கூறுகிறார்கள்.

    கோப்புப்படம்


    மாணவர்கள் ஆசிரியர்கள் திட்டுவதையும், கண்டிப்பதையும் எண்ணி வருத்தப்படக்கூடாது. வேண்டா வெறுப்பாக மாணவர்களை எந்த ஆசிரியரும் திட்டுவது கிடையாது.

    உங்கள் மீதான அக்கறையில்தான் திட்டுகிறார்கள். அது நீங்கள் வாழ்வில் பெரிய ஆளாக வரும் சூழ்நிலையில் அன்றைக்கு ஆசிரியர் கண்டித்ததன் பயனை உணருவீர்கள். இன்றைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நல்லாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விருதுகள் பெறாத ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் அதிகம் பாடுபடவில்லை என்று அர்த்தமில்லை. நாமும் விருது பெற வேண்டும் என்ற அளவில் உங்கள் உழைப்பை அதிகரிக்க செய்யவே விருது வழங்கப்படுகிறது.

    ஆசிரியர்களையும், தியாகிகளையும் மட்டும்தான் முன்னாள் ஆசிரியர், முன்னாள் தியாகி என்று சொல்வதில்லை. எப்போதும் அவர்கள் ஆசிரியர்கள், தியாகிகள் தான். இன்றைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகி எனது கரங்களால் நல்லாசிரியர்களுக்கு விருதுகளை வழங்குவது பெருமையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×