search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    ஸ்ரீரங்கம் அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் தொழிலாளி பலி

    ஸ்ரீரங்கம் அருகே கொள்ளையர்கள் தாக்கியதில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சி திருவானைக் காவல் நடு கொண்டையன் பேட்டை மல்லிகைபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 67). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். பின்னர் அவர்கள், மனோகரன் சட்டைப் பைக்குள் கையை விட்டு அதில் இருந்த பணத்தை எடுத்தனர். அப்போது மனோகரன் திடுக்கிட்டு எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அவரை கைகளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் நிலைதடுமாறிய அவர் வீட்டின் முன்பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு அங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மனோகரன் பரிதாபமாக இறந்தார் . கொள்ளையர்களால் தாக்கப்பட்டு தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும்போது, கொள்ளையர்கள் கைகளால் மட்டுமே தாக்கியுள்ளனர். அதன்பின்னர் அவர் நடந்து செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதிக் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆகவே விசாரணைக்கு பின்னரே கொலை வழக்கு பதிவு செய்ய முடியும் என தெரிவித்தனர். முதியவரை தாக்கிய பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×