search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த காட்சி.
    X
    கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த காட்சி.

    கள்ளச்சாவி போட்டு திறந்து தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை-பணம் கொள்ளை

    திண்டிவனம் அருகே கள்ளச்சாவி போட்டு திறந்து தொழிலாளி வீட்டில் இருந்து 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மேல்பக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கலைராஜ் (வயது 26). இவர் திண்டிவனம் பாரதிதாசன் பேட்டை பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று கலைராஜ் வீட்டை பூட்டி விட்டு பாரதிதாசன் பேட்டை பகுதியில் இருந்து தனது சொந்த ஊரான மேல்பக்கம் பகுதிக்கு சென்று உள்ளார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை கள்ள சாவி போட்டு திறந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு சென்றனர்.

    மேலும் இந்த திருடர்கள் வீட்டில் இருந்த பாதாம் பிஸ்தா, முந்திரி போன்ற அனைத்து பொருட்களையும் சாப்பிட்டு விட்டு சென்று உள்ளனர்.

    இன்று காலை கலைராஜ் பாரதிதாசன் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு கலைராஜ் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு உள்ள நகை, வெள்ளிபொருட்கள், பணம் கொள்ளை போனது கண்டு பதறி போனார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. கணேசன் மற்றும் ரோசணை போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகைகளை சேகரிக்க சிங்காரப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி வரவழைக்கப்பட்டார். விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் வரை ஓடி சென்று நின்றது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

    இது குறித்து ரோசணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×