search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்ததை படத்தில் காணலாம்.
    X
    மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்ததை படத்தில் காணலாம்.

    மதுரை மேம்பாலம் இடிந்து விபத்து- 3 பேர் மீது வழக்குப்பதிவு

    நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.
    மதுரை:

    மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் திட்டமாக மதுரை-நத்தம் இடையே ரூ.980 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இதன் மொத்த தூரம் 44.3 கி.மீ. ஆகும். அதில் மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம், செட்டிக்குளம் வரை உள்ள 7.3 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட பறக்கும் சாலை மேம்பாலமும், செட்டிக்குளத்தில் இருந்து நத்தம் வரை உள்ள 33.4 கி.மீ. தூரத்திற்கு சாலையும் அமைக்கப்படுகிறது. இது தமிழகத்தின் 2-வது மிக நீளமான மேம்பாலம்.

    இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து நகர் பகுதியில் கீழே இறங்குவதற்காக பல்வேறு இடங்களில் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.

    அதில் இணைப்பு பாலத்தின் நீளம் சுமார் 800 அடியாகும். 114 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் 7 தூண்கள் அமைக்கப்பட்டு அந்த பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது. அதில் 4 மற்றும் 5-வது தூண்களை இணைக்கும் பாலத்தின் மட்டத்தை சரி செய்யும் பணிகள் நேற்று நடந்தன.

    இதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி எந்திரம் மூலம் பாலத்தின் ஒரு பகுதி தூக்கி நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. 4-வது தூணில் நின்று 2 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் இருந்து இணைக்கப்படும் பிரஷர் குழாய் திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜாக்கி கீழே விழுந்தது. அதனால் பாலமும் அடுத்தடுத்த வினாடிகளில் பலத்த சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது.

    அப்போது இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 தொழிலாளர்களும் மேலே இருந்து கீழே விழுந்தனர். அதில் சுராஜ் குமார் என்ற வாலிபர் காயமின்றி தப்பினார். ஆனால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (வயது 27) என்பவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

    மேம்பால விபத்து

    இந்த பாலம் விழுந்த சத்தம் அப்பகுதியில் சில கிலோ மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது.

    போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். பேரிடர் மீட்பு படையினரும் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வேறு யாரும் பாலத்தின் அடியில் சிக்கவில்லை.

    இந்நிலையில், மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


    Next Story
    ×