search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஒட்டுக்குளத்தில் இருந்து முறைகேடாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    ஒட்டுகுளத்திற்கு தண்ணீர் தொடர்ந்து வரும் பட்சத்தில் உபரிநீர் உடுமலை நகரை ஒட்டியுள்ள ராஜவாய்க்காலில் திறந்து விடப்படுவது வழக்கம்.
    உடுமலை,:

    உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை வரை ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், தினைக்குளம் உள்ளிட்ட 8 குளங்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலான 10 மாதங்களுக்குள் அரசாணைப்படி குறிப்பிடப்படும் அளவு தண்ணீர் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது திறந்து விடப்படும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு இந்த குளங்களுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதில் பல குளங்களில் ஏற்கனவே விடப்பட்ட தண்ணீர் குறைந்த அளவு உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் தங்கள் பகுதியில் பாசனம் செய்து வருகின்றனர். இந்த குளங்களில் உடுமலை நகரை ஒட்டியுள்ளது ஒட்டுக்குளம். இந்த குளத்தின் மொத்த உயரம் 10 அடி. இந்த குளம் பலத்த மழை காலங்களில் நிரம்பி விடும். 

    அவ்வாறு நிரம்பும்போது குளத்திற்கு தண்ணீர் தொடர்ந்து வரும் பட்சத்தில் உபரிநீர் உடுமலை நகரை ஒட்டியுள்ள ராஜவாய்க்காலில் திறந்து விடப்படுவது வழக்கம். இதற்காக ஷட்டர் உள்ளது. அந்த ஷட்டர் பகுதியில் தற்போது சிறிய தடுப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளத்து தண்ணீர் குளத்திற்குட்பட்ட பாசன பகுதிகளுக்கு அதற்கான ஷட்டர்கள் வழியாக முறைப்படி சென்று கொண்டுள்ளது.

    இந்தநிலையில் குளம் நிரம்பினால் உபரிநீர் திறந்து விடக்கூடிய ஷட்டர் வழியாக ராஜவாய்க்காலில் கடந்த சில நாட்களாக தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த தண்ணீர் திறப்பில் விவசாயிகள் அல்லாதவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்வது குறித்து பி.ஏ.பி.பாசன திட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு சென்று ராஜவாய்க்கால் ஷட்டரை அடைத்து பூட்டினர்.
    Next Story
    ×