search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன்
    X
    முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன்

    மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க.,வின் போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் -சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

    மத்திய அரசு ஒருபோதும் அரசியல் லாப நோக்கத்திற்காக ஒரு மாநிலத்தின் உரிமையை பறித்து இன்னொரு மாநிலத்திற்கு கொடுக்காது என முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் என்று முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்தவித சலசலப்புக்கு இடம் கொடுக்காமல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். மத்தியில் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி கூட கொண்டுவரவில்லை. ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்துக்கு 11 மருத்துவக்கல்லூரியை கொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் ஏழை, எளிய மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார். 

    மத்திய அரசு ஒருபோதும் அரசியல் லாப நோக்கத்திற்காக ஒரு மாநிலத்தின் உரிமையை பறித்து இன்னொரு மாநிலத்திற்கு கொடுக்காது. மேகதாது அணை வருவதற்கு வாய்ப்பே இல்லை என பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தும் கூட தி.மு.க.வினர் இங்கு கூக்குரலிட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் மேகதாது அணை திட்டம் வகுத்த போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த அணை விவகாரத்தில் பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமையும். காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் பிரதமர் மோடியால் மட்டுமே சாத்தியமாகும்.

    தென்னகத்தில் உள்ள நதிகள் இணைக்கப்படும் போது தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இதற்காக மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது. தி.மு.க., பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×