search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பு அறுவடை
    X
    கம்பு அறுவடை

    மடத்துக்குளம் பகுதியில் கம்பு அறுவடை பணிகள் தீவிரம் தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு

    இறவையில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கம்பு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கம்பு உள்ளிட்ட சிறுதானியப் பயிர்களுக்கு மவுசு கூடி வருவதால் இறவைப்பாசனத்திலும் கம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் இறவைப் பாசனத்தில் கம்பு சாகுபடியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து மடத்துக்குளத்தையடுத்த கிளுவன்காட்டூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:- இறவையில் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் கம்பு வறட்சியைத்தாங்கி வளரக்கூடியது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீரிய ஒட்டு ரகங்கள் அதிக மகசூல் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் கம்பு சாகுபடியைப் பொறுத்தவரை பூக்கும் பருவம் மற்றும் கதிர் முற்றும் பருவத்தில் போதுமான அளவில் தண்ணீர் கிடைத்தால் தான் நல்ல மகசூல் கிடைக்கும். 

    ஆனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால் கதிர் முற்றும் பருவத்தில் போதுமான அளவில் நீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் ஏக்கருக்கு 500 கிலோ வரை மகசூல் குறைவு ஏற்பட்டுள்ளது. கம்பு சாகுபடியில் அதிக அளவில் கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. 

    ஆனால் ஒரு நாளைக்கு ரூ.350 கூலியாக கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் குறைந்த பணியாளர்கள் மூலம் சாகுபடி செய்யக்கூடிய பயிர்களை தேடித்தேடி பல விவசாயிகளும் பயிரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. கதிர் முற்றும் பருவத்தில் பறவைகளிடமிருந்து காலை மாலை வேளைகளில் பாதுகாப்பதற்கு ஓடி ஓடி காவல் காக்க வேண்டும்.

    கம்பு அறுவடைக்குப்பிறகு கதிர்களிலுள்ள மணிகளை தனியாக பிரித்து எடுப்பதற்கு எந்திரங்களுக்காக காத்திருக்க வேண்டும். இந்த எந்திரத்துக்கு 100 கிலோ தானியத்தை பிரித்தெடுக்க ரூ 200 கூலியாகக் கொடுக்க வேண்டும். இத்தனை சிக்கல்களையும் தாண்டி விளைபொருளை விற்பனைக்குக் கொண்டு சென்றால் போதிய விலை கிடைக்க வேண்டும். 

    இத்தகைய சிக்கல்களால் பல விவசாயிகளும் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மானியத்தை விட போதுமான அளவில் பாசன நீர், எல்லா நேரமும் மும்முனை மின்சார வசதி, தரமான இடுபொருட்கள், விளைபொருட்களுக்கு போதிய விலை, குறிப்பாக கூலி ஆட்கள் பிரச்சினைக்கு தீர்வு போன்றவை கிடைத்தால் விவசாயம் சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×