search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூடப்பட்ட ரங்கநாதன் தெரு
    X
    மூடப்பட்ட ரங்கநாதன் தெரு

    சென்னையில் 9 இடங்களில் கடைகள் மூடல்- பொதுமக்கள் பாதிப்பு

    பொதுமக்கள் கூடாத வண்ணம் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒலி பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, கொத்தவால்சாவடி உள்பட 9 இடங்களில் இன்று கடைகள் மூடப்பட்டன.

    சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று 3-வது அலை வராமல் தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் தி.நகர் ரெங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் சாலைபகுதிகள், கொத்தவால்சாவடி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது

    அதன்படி இன்று (31-ந் தேதி) காலை முதல் மக்கள் கூடும் 9 முக்கிய இடங்களில் கடைகள் மூடப்பட்டு இருந்தன.

    வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்க அனுமதிக்கப்படாததால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    மேலும் பொதுமக்கள் கூடாத வண்ணம் சமூக இடைவெளியை கடை பிடிக்க ஒலி பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இன்று கடைகள் மூடப்பட்ட பகுதியில் வருமாறு:-

    தி.நகர் ரெங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, ஜாம்பஜார் மார்க்கெட் சாலை பகுதிகள், பாரிமுனை குறளகம், என்.எஸ்.சி. போஸ்சாலை பகுதிகள், ராயபுரம் மார்க்கெட், கல்மண்டபம் சாலை பகுதிகள், அமைந்தகரை மார்க்கெட் புல்லா அவென்யூ சாலை பகுதிகள், செங்குன்றம் மார்க்கெட் சாலை பகுதிகள் ஆகியவை மூடப்பட்டன.

    வருகிற 9-ந் தேதி வரை இப்பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது. கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளை (1-ந் தேதி) முதல் மூடப்படுகிறது.

    சென்னை மாநகராட்சியின் இந்த திடீர் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கடைகள் மூடப்படுவதால் கடைகளில் உள்ள பொருட்கள் வீணாகும். எனவே வியாபாரிகளுக்கு கால அவகாசம் அளித்து இருக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆங்காங்கே வியாபாரிகள் திரண்டு எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் சென்னை மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×