search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித்துறை
    X
    பள்ளிக்கல்வித்துறை

    அனைத்து ஆசிரியர்களும் 2ந்தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும்- கல்வித்துறை உத்தரவு

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருந்தார்.
    சென்னை:

    பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, தலைமை ஆசிரியர்களுக்கு உதவி செய்ய ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை தந்து பணிபுரிய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மாணவிகள்

    தற்போது மாணவர் சேர்க்கை பணி, பள்ளி கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ‘அசைன்மெண்ட்' வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், இருதயநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உள்ளவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே அந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை பெறுவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என்ற அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×