search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேந்தமங்கலம் அருகே செல்போன்கள் திருடிய பெண் உள்பட 3 பேர் கைது

    சேந்தமங்கலம் அருகே செல்போன்கள் திருடிய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 27). இவர் அந்த பகுதியில் 3 செல்போன் கடைகள் நடத்தி வருகிறார். கடந்த 10-ந் தேதி இரவு இவர் அந்த 3 கடைகளையும் பூட்டிவிட்டு வழக்கம் போல் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மறுநாள் காலையில் கடைகளை திறக்க வந்த போது அந்த கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் உள்ளே இருந்த 34 செல்போன்கள் திருட்டு போயிருந்தன. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அரவிந்தன் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் புதன்சந்தை சுண்ணாம்பு சூளை சாலை பகுதியைச் சேர்ந்த சாந்தி (20) என்பவருக்கும், தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த கொள்ளையன் சரத் என்பவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து சாந்தி, சரத் மூலம் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    குறிப்பாக அவர்கள் இருவரும் தங்களின் கூட்டாளிகளான தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த விஷ்ணு (21), இசக்கி (29), கணேசன் (26) ஆகியோருடன் சேர்ந்து அரவிந்தனின் செல்போன் கடைகளில் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த சாந்தி, சரத், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 34 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இசக்கி, கணேசனை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×