search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.133 கோடி நிதியை முழுமையாக வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

    ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    சென்னை:

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால், பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.  அவர்களில் கொரோனா நிவாரண உதவியாக மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.133 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வின் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கண்பார்வையற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், கண்பார்வையற்றவர்களுக்கு பொருந்தாது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கண்பார்வையற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரினார்.

    இதேபோன்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
     
    மேலும், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 69 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும், மீத தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.

    இதனையடுத்து, அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில் மீதமுள்ள ரூ.64 கோடி நிலை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரூ.133 கோடி நிவாரண தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தன.  இதனை தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.

    அப்போது மனுதாரர் சார்பில், மாற்று திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை, பென்ஷன் வழங்குவது குறித்த விவரங்கள் மட்டுமே அரசு தாக்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், உதவி தொகை குறித்த விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் மாற்று திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி மற்றவர்களுக்கு கொடுக்கும் நிவராண தொகையை விட 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், கொரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    ஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கோப்புபடம்

    தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு, எந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பது மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தலாம் என தெரிவித்தனர்.

    அதனுடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாய் முழுமையாக 13.35 லட்சம் மாற்று திறனாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மாற்று திறனாளிகளுக்கு வழங்கிய விவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்து உள்ளனர்.
    Next Story
    ×