search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- கே.எஸ்.அழகிரி

    கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு, ஊக்கத்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்க முன் வந்ததற்காகத் தமிழக அரசை மருத்துவர்கள் மனதார பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, கொரோனா தொற்றுப் பரவல் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இருப்பினும் உறுதியான நடவடிக்கை மூலம், 36 ஆயிரமாக உச்சத்திலிருந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையை மூன்றாயிரத்துக்கும் கீழே குறைத்துள்ளதை நாடே பாராட்டிக் கொண்டிருக்கிறது.  

    இதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இரவு, பகலாக உழைத்த அரசு மருத்துவர்கள், மூன்றாவது கொரோனா அலையே வந்தாலும் முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி சமாளிக்க உறுதியாக இருக்கிறார்கள். 

    கொரோனா தொற்றுக்கு பல மருத்துவர்களை இழந்தோம். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுத்ததோடு, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுக்கு, ஊக்கத்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் வழங்க முன் வந்ததற்காகத் தமிழக அரசை மருத்துவர்கள் மனதார பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    இருப்பினும், நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியத்தை தமிழக அரசு மருத்துவர்கள் பெற்று வருகின்றனர். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நியாயமான ஊதியக் கோரிக்கைக்காகப் போராடிய 118 மருத்துவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். நாட்டிலேயே ஊதியக் கோரிக்கைக்காக போராடிய மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் தமிழகத்தில் தான் நடந்தது. அதன் பிறகும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி அரசு முன்வரவில்லை.

    சுகாதாரத்துறை செயல்பாடுகளில் 25-வது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கூட அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால் முன்னணி மாநிலமான தமிழகத்தில் மருத்துவர்களுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக உரிய ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது. அதுவும் மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்குக் குறைவான ஊதியமே தரப்படுகிறது.

    ஒவ்வொரு அரசு மருத்துவரும் கடந்த 10 வருடங்களாக மாதம் தோறும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வருமான இழப்புடன் மன உளைச்சலில் பணியாற்றி வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.   

    கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்-அமைச்சர் அயராது பாடுபட்டு வருகிறார். அதுபோல அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை 354-ன் படி, சிறப்பு மிக்க ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
    Next Story
    ×