search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக-திமுக
    X
    அதிமுக-திமுக

    உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக-அதிமுக

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளதால், உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை கொடுப்பார்கள் என தெரிகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன.

    இந்த தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில் 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றவர்கள், தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். இதே போல் ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்தனர்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தேர்வானவர்கள் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக  9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடையாமல் இருந்ததால் அப்போது உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்படவில்லை.

    அதன் பிறகு தேர்தல் நடத்துவதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தாலும் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது.

    சுப்ரீம் கோர்ட்

    இந்த நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 22-ந்தேதி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், “இனி கால அவகாசம் தர முடியாது. செப்டம்பர் 15-ந்தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகிறது.

    வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, வாக்கு சீட்டுகளை அச்சடிப்பது, வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பாக இப்போதே ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் முடிவடைய அநேகமாக ஒரு மாத காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத கடைசி வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய  தமிழக சட்டசபை கூடுகிறது.

    தமிழக சட்டசபை

    பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம். பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் இப்போதே தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய பிரமுகர்கள், அந்தந்த மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு இப்போதே தங்களுக்கு சீட் கிடைக்க பேசி வருகிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்தான் தலைமைக்கு பட்டியல் கொடுத்து விட்டு வேட்பாளரை அறிவிப்பார். அதனால் மாவட்ட செயலாளரை கட்சி நிர்வாகிகள் அடிக்கடி சென்று பார்த்துவிட்டு வருகிறார்கள். 

    தி.மு.க. ஆளும் கட்சியாக உள்ளதால், மற்ற கட்சியை சார்ந்த சிலர் கடந்த 2 மாதமாக தி.மு.க.வுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதிலும் குறிப்பாக அ.தி.மு.க., தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மாற்று கட்சியில் உள்ள சிலர் விரக்தி அடைந்து தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

    கடந்த மாதம் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போது, மாவட்ட செயலாளர்களுக்கு அவர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்கள் கேட்கும் சீட்களை முடிந்த அளவு கொடுக்க பரிசீலிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றியை பெற முடியும் என்றார். 

    அதற்கேற்ப இப்போது தி.மு.க. கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் தீவிரம்  காட்டி வருகின்றனர். 

    அந்தந்த ஊர்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளையும் கட்சி நிர்வாகிகள் தொடங்கி விட்டனர்.

    காங்கிரஸ் கட்சியில் அந்தந்த மாவட்ட தலைவர்கள் வேட்பாளர் பட்டியலை இப்போதே தயார் செய்ய தொடங்கிவிட்டனர். இந்த பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவருக்கு விரைவில் பரிந்துரை செய்ய உள்ளனர். 

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளதால், உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை கொடுப்பார்கள் என தெரிகிறது. 

    ஆனால் பா.ஜனதா கட்சி 25 சதவீத இடங்களை கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

    இதேபோல பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் தொடருமா?  அல்லது தனியாக நிற்குமா? என்பது போகப்போகத்தான் தெரியவரும். கூட்டணி கட்சிகளை தக்க வைத்து கொள்ள தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. 

    இந்த தேர்தல் முடிந்ததும், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேர்தலுக்கும் இப்போதே கட்சிகள் தயாராகி வருகின்றன. அதை மனதில் வைத்துக் கொண்டு முக்கிய பிரமுகர்கள் பலர் காய் நகர்த்தி வருகின்றனர். 

    சட்டமன்ற தேர்தலில் தோற்றவர்கள் மாநகராட்சி மேயர் அல்லது நகராட்சி தலைவர் பதவிக்கு நிற்கலாமா என்ற யோசனையில் மேலிட நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். 

    எனவே சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகிவிடும்.
    Next Story
    ×