search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்காதேவி
    X
    கங்காதேவி

    அழகுநிலைய பெண் தற்கொலை வழக்கில் திருப்பம் - கள்ளக்காதலன் கைது

    கோவை அருகே நடந்த அழகு நிலைய பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். ஊட்டியில் பதுங்கி இருந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    கருமத்தம்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். (வயது 44). இவர் கோவை மாவட்டம் சோமனூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கங்காதேவி (39). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் பெங்களூருவில் படித்து வருகிறார்.

    கங்காதேவி தனது வீட்டின் அருகே அழகுநிலையம் நடத்தி வந்தார். வழக்கமாக அவர் பணிமுடிந்து மாலை 5 மணிக்கு வீடு திரும்பி விடுவார். ஆனால் கடந்த 6-ந் தேதி இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த கணவர் சீனிவாசன் அழகுநிலையம் சென்று மனைவியை அழைத்து வர போனார். அங்கு சென்று அவர் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த அழகு நிலையத்துக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையிலும் கங்காதேவி இருந்தார்.

    உடனே பதறி போன சீனிவாசன், தனது மனைவியின் கை, கால்களில் கட்டப்பட்ட கட்டுகளை அவிழ்த்ததுடன், நடந்தது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் 3 கொள்ளையர்கள் வந்து தன்னை கட்டிப்போட்டுவிட்டு 19 பவுன் நகையை கொள்ளையடித்ததுடன், அவர்கள் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அழுதபடியே கூறினார்.

    இதை நம்பிய சீனிவாசன், தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆறுதல் படுத்தினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துவிடுவோம் என்று சீனிவாசன் கூறியுள்ளார். ஆனால் போலீசில் புகார் செய்ய வேண்டாம். கொள்ளையர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், வெளியே தெரிந்தால் நமக்கு தான் அசிங்கம் என்று கங்காதேவி கூறினார். கொள்ளையர்களை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் இருந்த சீனிவாசன் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் மறுநாள் காலையில் புகார் செய்தார். இதனால் கங்காதேவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி போலீசார் அழகுநிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கங்காதேவியையும் அழகு நிலையத்துக்கு வந்து கொள்ளை நடந்த விவரங்களை கூறுமாறு போலீ சார் கேட்டுக்கொண்டனர். மேலும் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.

    அழகுநிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் கங்காதேவி எதுவும் தெரியாதது போல் நின்றார். ஆனால் எதிரில் உள்ள ஒரு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யப்போவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கங்காதேவி வீட்டுக்கு வந்தார்.

    பின்னர் திடீரென்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்ததும் கணவர் சீனிவாசன் மற்றும் அவருடைய மகன் கதறி துடித்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தில் துப்புதுலக்கி நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    கங்காதேவியின் செல்போனை கைப்பற்றியபோது, அதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்தன. பெங்களூருவில் இருந்து மகள் போனில் பேசியது மட்டும் இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது கடந்த மாதம் கங்காதேவியின் மற்றொரு செல்போன் திருட்டு போனதாக கணவரிடம் தெரிவித்து இருந்தது தெரியவந்தது.

    அந்தபோன் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து விசாரித்தபோது, மதுரையை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் அந்த போனை பயன்படுத்தி வருவதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து கங்காதேவி யாரிடம் எல்லாம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் என்று போன் நம்பரை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் முத்துபாண்டி என்பவரிடம் தொடர்ந்து பல முறை பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டியில் பதுங்கி இருந்த முத்துபாண்டி (42) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் திடுக்கிடும் உண்மை வெளியே வந்தது. அதாவது கங்கா தேவிக்கும், முத்துபாண்டிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், 19 பவுன் நகையை கங்காதேவி தனது கள்ளக்காதலனான முத்து பாண்டிக்கு கொடுத்துவிட்டு, இந்த நாடகம் கணவருக்கு தெரியாமல் இருப்பதற்காக தன்னை கட்டிப்போடுமாறு கூறி கொள்ளை நாடகம் நடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கள்ளக்காதலனான முத்துபாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 19 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் முத்துபாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொள்ளை நாடகம் நடத்தி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×