search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    மேகதாது அணை கட்டுவதை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

    அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்ற கர்நாடக முதல்-மந்திரி தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உச்சநீதிமன்றத்திற்கு இணையான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை முற்றிலும் அவமதிக்கும் வகையிலும், இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையிலும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தப் பிறகும் “மேகதாதுவில் அணை கட்டப்படும்” என்று கர்நாடக முதல்-மந்திரி அறிவித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

    மேகதாதுவில் அணைகட்ட 2014-ம் ஆண்டு கர்நாடக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்வதற்காக 25 கோடி ரூபாயை ஒதுக்கியபோதே அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடகா எடுக்கக்கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், எந்த நீர் திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி 2 தீர்மானங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அம்மா ஆணைப்படி என்னால் 5.12.2014 மற்றும் 27.3.2015 ஆகிய நாட்களில் முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதுதொடர்பாக 26.03.2015 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    குடிநீர் வழங்கல் என்ற போர்வையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்-மந்திரியின் தன்னிச்சையான அறிவிப்பு தமிழக மக்களை, குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாக, பாசனத்திற்கும், குடிநீருக்கும் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறையும் என்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு பாலைவனமாகக் கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

    இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. “அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்ற கர்நாடக முதல்-மந்திரி தன்னிச்சையாக அறிவித்து இருப்பதற்கு அ.தி.மு.க. சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதுபோன்ற ஒருதலைபட்சமான செயல் இரு மாநில உறவையும் பாதிக்கும். எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேகதாது அணை கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்காத வகையில் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×