search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருமங்கலம் அருகே விபத்து- பெண் வக்கீல் பலி

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் வக்கீல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 48). இவர் புதுக்கோட்டையில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ரவிச்சந்திரன் தனது கடையில் விற்பனைக்காக மொத்தமாக பட்டாசுகளை வாங்க திட்டமிட்டார்.

    இதற்காக நேற்று ரவிச்சந்திரன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து சிவகாசிக்கு புறப்பட்டனர்.

    நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் மதுரை திருநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை மீண்டும் இருவரும் மோட்டார் சைக்கிளில் சிவகாசி புறப்பட்டனர்.

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் நாய் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    விபத்தில் மீனாட்சி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லேசான காயத்துடன் கணவர் ரவிச்சந்திரன் உயிர் தப்பினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×