search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு கொசு
    X
    டெங்கு கொசு

    கடந்த 5 மாதங்களில் தமிழகத்தில் 2008 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

    கொரோனாவுக்கும், டெங்குவுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படுவதால் அதை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ்-எஜிப்டி’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு தமிழகத்தில் 8527 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனர்.

    2020-ம் ஆண்டில் டெங்கு பாதிப்பு விகிதம் 75 சதவீதம் குறைந்தது. அந்த ஆண்டில் 2410 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே குணமடைந்து விட்டனர்.

    கொரோனா வைரஸ்

    இந்த ஆண்டு கடந்த 5 மாதத்தில் 2008 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை இதைவிட குறைவாகவே இருந்தது.

    கொரோனாவுக்கும், டெங்குவுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள் காணப்படுவதால் அதை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


    இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 5 மாதங்களில் 2008 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டனர். டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை.

    டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக கொரோனாவுக்கு மத்தியிலும் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம். கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் வசதிகளும் அரசிடம் உள்ளன.
    Next Story
    ×