search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பாம்பன் விசைப்படகு.
    X
    இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய பாம்பன் விசைப்படகு.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு- 7 பேர் உயிர் தப்பினர்

    நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் படகு சேதம் அடைந்தது. அதில் இருந்த 7 பேர் உயிர் தப்பினார்கள்.
    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 87 விசைப்படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்தபோது ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர்.

    பாம்பன் மீனவர்களை விரட்டியடிக்கும் நோக்கில் வந்த அவர்கள், நடுக்கடலில் திடீரென விசைப்படகுகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் பாம்பன் லிம்ரிட் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்றிருந்த ஜெகதீஸ், சிலுவை, அருளானந்தம், பிரவீன், பீட்டர், கிளிண்டன், சிஸ்கோ ஆகிய 7 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் சுட்டதில், துப்பாக்கி தோட்டாவானது படகை துளைத்து அதன் உள்ளே வந்து விழுந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வலைகளை வேகவேகமாக எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தனுஷ்கோடி பகுதியை நோக்கி திரும்பினர். அதன்பின்னர் அங்கு மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் அனைவரும் நேற்று காலை கரை திரும்பினார்கள்.

    பாம்பனை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் துறைமுக பகுதிக்கு விரைந்து சென்று, மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து சேதமான படகின் உரிமையாளர் லிம்ரிட் நேற்று ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மீன்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரனிடம் விளக்கினார்.

    தமிழக மீனவர்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்க வராமல் தடுக்கவே இலங்கை கடற்படையினர் பாம்பன் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கமாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் ராமேசுவரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. ஆனால் தற்போது தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×