search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    X
    உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள்-தடுப்பூசி: மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்

    வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    கொரோனா பெருந்தொற்றில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களை பாதுகாத்திடும் சீரிய நோக்கத்தோடு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் காட்சி.


    இந்த ஆணைக்கிணங்க, முதல்கட்டமாக 2 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினையும், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பணிவாய்ப்பை இழந்த, குடும்ப அட்டை இல்லாத, புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு, 1,29,444 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில், 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தை இன்று நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.சண்முகம், தமிழச்சி தங்க பாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் ஆர்.கிர்லோஷ் குமார், தொழிலாளர் துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் எம்.வி. செந்தில்குமார், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொழிற் சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×