search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெல்லம்
    X
    வெல்லம்

    உடுமலையில் வெல்லம் உற்பத்தி தீவிரம்

    கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் விலை பல மடங்கு சரிந்து உற்பத்தியாளர்கள் பாதித்தனர். கேரளாவில் விற்பனை செய்ய வெல்லம் கொண்டு செல்வதிலும் பல்வேறு சிக்கல்கள் உருவானது.
    உடுமலை:

    உடுமலை பள்ளப்பாளையம், போடிபட்டி, அம்மாபட்டி, சுண்டக்காம்பாளையம், சாளரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. ஏழு குள பாசனம் மற்றும் அமராவதி புதிய ஆயக்கட்டு பகுதியில் சாகுபடி செய்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், வெல்ல உற்பத்திக்கும் விவசாயிகள் கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.

    சில விவசாயிகள் தங்கள் தோட்டங்களிலேயே வெல்ல உற்பத்திக்காக ஆலை அமைத்துள்ளனர். இங்கு உற்பத்தியாகும், கரும்பு வெல்லம் கேரளாவுக்கு, அதிகளவு விற்பனையாகி வந்தது.கேரளா மூணாறு, மறையூர், பாலக்காடு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு உடுமலையில் இருந்து வெல்லம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வெல்லம் விலை பல மடங்கு சரிந்து உற்பத்தியாளர்கள் பாதித்தனர். கேரளாவில் விற்பனை செய்ய வெல்லம் கொண்டு செல்வதிலும் பல்வேறு சிக்கல்கள் உருவானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெல்ல உற்பத்திக்கான ஆலையை கைவிடும் சூழல் ஏற்பட்டது. கரும்பு சாகுபடியையும் சிலர் கைவிட்டனர்.

    கடந்தாண்டு பெய்த பருவமழை, பாசனத்துக்கு குறித்த காலத்தில் தண்ணீர் திறப்பு போன்ற காரணங்களால் கரும்பு சாகுபடியை மீண்டும் மேற்கொண்டனர். தற்போது, அறுவடை சீசன் துவங்கியுள்ளது. வெல்ல உற்பத்திக்காக விளைநிலங்களில் ஆலை அமைக்கப்பட்டு கரும்பு சாறு பிழியும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    கரும்பின் பிழிதிறன் அடிப்படையிலேயே வெல்லத்தின் தரமும் இருக்கும். கடந்தாண்டு நிலவிய சீதோஷ்ண நிலை காரணமாக நல்ல பிழிதிறன், சர்க்கரை கட்டுமானம் உடைய கரும்பு உற்பத்தியாகியுள்ளது.

    எனவே தோட்டத்திலேயே ஆலை அமைத்து வெல்லம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்பகுதியில் உற்பத்தியாகும் வெல்லத்தை கேரளாவில் விற்பனை செய்ய அரசு உதவினால் இத்தொழில் பாதிப்பிலிருந்து மீளும் என்றனர்.
    Next Story
    ×