search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சிலரை காணலாம்.
    X
    திருச்சியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வந்த மாற்றுத்திறனாளிகள் சிலரை காணலாம்.

    கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் திருச்சிக்கு 6வது இடம்- கலெக்டர் எஸ்.சிவராசு பேட்டி

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக கடந்த 10 நாளில் மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
    திருச்சி:

    18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை திருச்சி கலையரங்கத்தில் நேற்று மாவட்ட சுகாதாரப்பணிகள், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்தின. இந்த முகாமை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். முகாமில், 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அப்போது கலெக்டர் எஸ்.சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக கடந்த 10 நாளில் மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் கராணமாக நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 21 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் தடுப்பூசி செலுத்தியதில் திருச்சிக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.

    இதுவரை 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருச்சி மாவட்டத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8.5 லட்சம் பேரை தவிர்த்து 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி அளிக்க வேண்டியுள்ளது.

    தடுப்பூசி முகாம்களில் அதிகளவில் மக்கள் கூடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வார்டு வாரியாக முகாம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். வரப்பெறும் ஒதுக்கீடுக்கு ஏற்ப திருச்சி மாநகரப் பகுதியில் நாளொன்றுக்கு 4 வார்டுகளில் முகாம் நடைபெறும். பள்ளிகள் திறக்க இன்னும் 3 மாத காலம் ஆகலாம் என்பதால், அந்தந்தப் பகுதிகளில் பள்ளிகளை தேர்வு செய்து விசாலமான இடத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்,

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×