search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் இளம்பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 கொள்ளையர்கள் கைது

    மதுரையில் பிறந்தநாள் கேக் வாங்க சென்ற இளம்பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை விராட்டிபத்து இருளாண்டி காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகள் பிரியா (வயது 19). சம்பவத்தன்று இவர் பிறந்த நாள் கேக் வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டிற்கு சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர் பிரியா அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக பிரியா எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி அதில் இடம் பெற்று உள்ள காட்சி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.

    அதில், பிரியாவிடம் 2 வாலிபர்கள் செயின் பறித்த காட்சி பதிவாகி இருந்தது. கேமிராவில் பதிவாகி இருந்த உருவங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த சின்னமணி என்ற மணி, ஜெயபிரகாஷ் என்ற வாலாந்தூரான் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் மேற்கண்ட 2 கொள்ளையர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பவுன் தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு மாநகர கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×