search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மாவட்ட கலெக்டர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

    தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலை தற்போது 13 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.

    தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

    மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசி வருவதை தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கொரோனா பரவலின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் விரைவில் கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

    ஆனாலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே அந்த மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடி

    இந்த சூழ்நிலையில் நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். 17-ந் தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடி  உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தின் அப்போதைய தொற்றின் நிலையை பிரதமரிடம் எடுத்துரைத்து, செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி போன்ற சில திட்டங்களுக்கு விரைவாக அனுமதி பெற முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

    அதற்காக தற்போதைய தொற்றின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.

    சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கொரோனா தொற்றின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.

    குறிப்பாக தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களின் நிலவரத்தை அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்குகிறார்.
    Next Story
    ×