search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர்
    X
    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மேட்டூர்:

    தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மூலமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. முதலில் குறுவை சாகுபடியும், தொடர்ந்து சம்பா தாளடி நெல் பயிர் சாகுபடியும் செய்யப்படுகிறது.

    அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருக்கும்பட்சத்தில் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். தற்சமயம் மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதாலும், பருவ மழையை எதிர்நோக்கியும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    மேட்டூர் அணை

    அதன்படி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இதற்காக மேல்மட்ட மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு அங்கிருந்து மின் விசையை இயக்கி தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்பு அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் மூலமாக பாசனத்திற்கான தண்ணீர் வெளியேற்றப்பட்டன. கால்வாயில் சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரை மலர்தூவி மு.க.ஸ்டாலின் வரவேற்று வணங்கினார்.

    அணை வரலாற்றில் இந்த திட்டமிட்ட தேதியில் இதுவரை 17 முறைகள் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது 18-வது முறையாக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜூன் 12-ந் தேதிக்கு முன்பு 10 முறையும், ஜூன் 12-ந் தேதிக்கு பிறகு 60 முறையும் இதுவரையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் தண்ணீர் திறப்பு அணை வரலாற்றில் 88-வது ஆண்டாகும்.

    முதல்கட்டமாக இன்று வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. அணை திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மதிவேந்தன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    தண்ணீர் திறப்புக்காக முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    வந்த வழிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஷ்வரி, மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்திருந்தனர்.


    டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடைமடை வரை பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1, 170 அடியாகவும், அணையின் நீர்மட்டம் 96.81 அடியாக இருந்தது.

    மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டம் பாசூர் வரை காவிரி ஆற்றில் 7 கதவணைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி 7 தடுப்பணைகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே கதவணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

    மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார்.

    Next Story
    ×