search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாணவிகளை எனது குழந்தைகளாகத்தான் பார்த்தேன்- கைதான ஆசிரியர் வாக்குமூலம்

    தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல தமிழகம் முழுவதும் இருந்து 120-க்கும் மேற்பட்ட பாலியல் புகார்கள் குவிந்தன. சென்னையில் மட்டும் 40 புகார்கள் வந்தன.
    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்திரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைனில் பாடம் நடத்தியபோது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுபோல பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள் துணிச்சலாக புகார் கொடுக்கலாம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

    அதனால் தோண்ட, தோண்ட வரும் புதையலைப்போல தமிழகம் முழுவதும் இருந்து 120-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தன. சென்னையில் மட்டும் 40 புகார்கள் வந்தன. அதில் தடகள விளையாட்டு பயிற்சியாளர் நாகராஜன், பயிற்சியின்போது தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு புகார் எழுந்தது. நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அடுத்து கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது பாலியல் புகார் கூறப்பட்டது. சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர் சிறையில் உள்ளார். அந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரிக்கிறார்கள்.

    இதற்கிடையே சென்னை அயனாவரத்தில் உள்ள மகரிஷி வித்யா மந்தீர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றும் ஜே.ஆனந்த் (வயது 52) மீதும் பாலியல் புகார் கூறப்பட்டது.

    இவர் சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்தீர் பள்ளியில் வேலை பார்த்தபோது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் எழுப்பிய இந்த புகார் பற்றி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    ஆசிரியர் ஆனந்தை பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 4 ஆண்டுகளுக்குமுன்பு பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அந்த மாணவி கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கிறார். அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி புகார் மனு பெற போலீசார் முயற்சித்தனர். ஆனால் அவரது பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர்.

    புகார்

    இந்த நிலையில் ஆசிரியர் ஆனந்த் மீது 2017-ம் ஆண்டு அவரிடம் பிளஸ்-2 படித்த மாணவி பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார். ஆசிரியர் ஆனந்த், தனி அறையில் வைத்து, தனக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பதாக சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆடை அணிவிப்பதாக சொல்லி தனது உடலின் அங்கங்களை தொட்டு அவர் ரசிப்பார் என்றும், அந்த மாணவி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

    உதவி கமிஷனர் ராஜ்மோகன் மேற்பார்வையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, ஆசிரியர் ஆனந்த் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தார்.


    இதனைத்தொடர்ந்து நேற்று அதிகாலை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தின் வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து அவரை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘என்னிடம் கல்வி பயின்ற மாணவ-மாணவிகளை எனது குழந்தைகளாகத்தான் நான் பார்த்தேன். நான் பாடம் நடத்தும் முறையை பார்த்து மாணவ-மாணவிகள் என்னிடம் அன்பாக பழகுவார்கள்.

    ஒரு விதமான பாசத்தில், என்னிடம் படித்த மாணவிகள் நன்றாக ஆடை அணிய வேண்டும் என்று நினைப்பேன். நன்றாக ஆடை அணியாத மாணவிகளுக்கு ஆடையை நன்றாக அணிவித்து உள்ளேன். குழந்தைக்கு ஆடை அணிவித்ததை, நான் தவறாக பார்க்கவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு, என்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி உள்ளீர்கள்’ என்று கண்ணீர் மல்க பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் ஆசிரியர் ஆனந்த் கூறுகையில், ‘என்னைப்பற்றி போலீசார் விசாரிக்க ஆரம்பித்தவுடன், நான் தற்கொலை செய்து உயிரை விட முடிவு செய்தேன். ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை என்று தெரிய வந்ததால், அந்த முடிவை கைவிட்டேன். எனது தாயார், உன்னை நம்பி வாழும் நான் எங்கே போவேன், என்று அழுதார். அதனால் உயிர் வாழ நினைத்தேன். நான் செத்திருக்கலாம், என்று இப்போது உணர்கிறேன், என்றும் கூறியுள்ளார்.

    அவர் தற்கொலை முடிவுக்கு போய் விடக்கூடாது என்பதால், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் ஆனந்த்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து வாழ்வதாக தெரியவந்துள்ளது.

    ஆசிரியர் ஆனந்த் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் கூறினார்கள்.
    Next Story
    ×