search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குமரி மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைகிறது: பலி குறைந்தபாடில்லை

    குமரி மாவட்டத்தில் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
    நாகர்கோவில்:

    கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 435 ஆக குறைந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது. பல நாட்களுக்கு பிறகு தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 435 பேரில் 3 பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இந்த 435 பேரில் ஆண்கள் 237 பேரும், பெண்கள் 186 பேரும் அடங்குவர். இதில் 12 சிறுவர்களும் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக நாகர்கோவில் நகரில் 97 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். வெகு நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம்நாகர்கோவில் நகரில் பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழாக குறைந்துள்ளது.

    மேலும் அகஸ்தீஸ்வரம் பகுதியில் 40 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 49 பேரும், முன்சிறை பகுதியில் 47 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 48 பேரும், திருவட்டார் பகுதியில் 74 பேரும், தக்கலை பகுதியில் 37 பேரும், கிள்ளியூர் பகுதியில் 25 பேரும், அதற்கும் குறைவாக தோவாளை மற்றும் மேல்புறம் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் நேற்றுமுன்தினம் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 16 பேர் இறந்த னர். அவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களாவர்.

    இதனால் குமரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,024 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிந்ததையடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டத்தின் பல இடங்களில் கொரோனாசிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    நாகர்கோவிலில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியர் குமாரசாமி கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.இங்கு டாக்டர் குழுவினர் 24 மணி நேரமும் நோயாளிகளை கண்காணித்து வருகிறார்கள். தற்போது பாதிப்பு குறைந்ததை அடுத்து பயோனியர் குமாரசாமி கல்லூரியில் செயல்பட்டுவந்த கொரோனா சிகிச்சை மையம் நேற்று மூடப்பட்டது.
    Next Story
    ×