search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    மிக கனமழைக்கு வாய்ப்புள்ள 2 மாவட்டங்கள்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்பச்சலனம் மற்றும் தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் (1.5 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி (3.1 முதல் 4.5 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கர்நாடக முதல் தென் தமிழ்நாடு வரை (1 கிலோ மீட்டர் உயரத்தில்) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் 

    அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    05.06.2021: தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    06.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    மழை

    07.06.2021 , 08.06.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.


    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

    கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்): 
    சித்தாறு (கன்னியாகுமரி) 14, சிவலோகம் (கன்னியாகுமாரி) 12, பேச்சிப்பாறை  (கன்னியாகுமரி) 11, பெருஞ்சாணி  (கன்னியாகுமரி)  10, மாரண்டஹள்ளி  (தர்மபுரி) 9, நிலக்கோட்டை  (திண்டுக்கல்), உசிலம்பட்டி  (மதுரை) தலா 7, காரியாபட்டி  (விருதுநகர்), நாமக்கல்  தலா  6, வால்பாறை (கோவை) 5, காங்கேயம்  (திருப்பூர்) 4,   துவாக்குடி  (திருச்சிராப்பள்ளி),  ஓமலூர்  (சேலம்),  ஓசூர்  (கிருஷ்ணகிரி),  சங்கராபுரம்  (கள்ளக்குறிச்சி) தலா 3. 

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:- 

    04.06.2021, 05.06.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    04.06.2021, 05.06.2021: கேரளா மற்றும், கர்நாடக கடலோர பகுதிகள்,  லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    04.06.2021 முதல் 08.06.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    இதனால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    குறிப்பு : தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×