search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தூத்துக்குடியில் கோடை மழையால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு - தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி:

    முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 20 லட்சம் டன் வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த தொழிலில் 400 சிறிய உற்பத்தியாளர்களும், ஏறத்தாழ 100 பெரிய உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    வெயில் காலங்களில் உப்பு உற்பத்தி மும்முரமாகவும், மழை காலங்களில் தொய்வும் ஏற்படும். தூத்துக்குடியில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பிப்ரவரி தொடக்கத்தில் உற்பத்தி தொடங்கும்.

    ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம் ஆகும். அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும்.

    ஆனால் இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி தாமதமாகவே தொடங்கயிது. ஜனவரி மாதம் பெய்த மழையால் உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதனால் மார்ச் மாதம் இறுதியிலேயே உப்பு உற்பத்தி தொடங்கியது.

    ஏப்ரல், மே மாதங்களில் உற்பத்தி படிப்படியாக உயரும் நிலையில் கடந்த ஒரு மாதமாக அவ்வப் போது பெய்யும் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக இந்த காலத்தில் 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படும். அந்த வகையில் 7.5 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகிவிடும். ஆனால் இந்த அண்டு இது வரை 10 சதவீதம் அளவுக்கு அதாவது 2.5 லட்சம் டன் உப்பு மட்டுமே உற்பத்தியாகி உள்ளது. இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    பருவம் தப்பி பெய்த மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 4 லட்சம் டன் உப்புகள் இருப்பு இருந்தது. பிப்ரவரி மாதம் வரை அது போதுமானதாக இருந்தது.

    மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியதால் ஓரளவுக்கு தேவை பூர்த்தி செய்தோம். தற்போது உப்பளங்களில் உப்பு கையிருப்பில் இல்லை. முழுமையாக காலியாகி விட்டது.

    தட்டுப்பாடு காரணமாக உப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ஒரு டன் உப்பு அதிகபட் சமாக ரூ. 2 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது வியாபாரிகள் ரூ. 5 ஆயிரம் வரை விலைக்கு கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுக்க எங்களிடம் உப்பு இல்லை. எனவே விலையேற்றத்தால் உற்பத்தியாளர்களுக்கு எந்த பயனும் இல்லை.

    மழை தொடர்ந்தால் உற்பத்தி செய்யப்படாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் நிலை ஏற்படும். மாறாக இனி வரும் நாட்களில் வெயில் அடித்தால் 2 வாரங்களில் உப்பு உற்பத்தி சீராகும்.

    தற்போது ஊரடங்கு காரணமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடாது. நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் நான்குசக்கர வாகனங்களில் தான் செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    உப்பளங்களில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தான் வேலைக்கு வருகிறார்கள். அவர்களை வேன் போன்ற வாகனங்களில் அழைத்து வருவது இயலாத காரியம்.

    எனவே அத்தியாவசிய உணவு பொருளான உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்படாமல் இருக்க உப்பளத் தொழிலாளர்களை இரு சக்கர வாகனங்களில் வேலைக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×