search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை குழு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

    இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த ‘மகாநதி.’
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

    இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

    இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த ‘மகாநதி.’ இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

    ஆன்லைன் வகுப்பு

    ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரி பார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

    இந்தப் பிரச்சினையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சினையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன்.

    குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தை பேசாமல் பிரச்சினையை மடை மாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

    குற்றம் இழைத்தவர்கள் எந்த சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலை நாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×