search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல்போல் காட்சி அளிக்கும் வைகை அணை.
    X
    கடல்போல் காட்சி அளிக்கும் வைகை அணை.

    முழு கொள்ளளவை எட்டும் வைகை அணை- கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை

    வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் அமைந்துள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

    மேலும் 5 மாவட்டங்களின் பாசன வசதி பெறும் அணையாகவும் உள்ளது. டவ்தே புயல் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வந்தது.

    மேலும் கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியிலும் பெய்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாகவும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    நேற்று இரவு 10 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாலும் இன்று அல்லது நாளைக்குள் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டினால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டினால் 3-ம் கட்ட எச்சரிக்கையும் விடப்பட்டு அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படும். இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் வந்துகொண்டு உள்ளது.

    இதனிடையே பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என மதுரை மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். வைகை அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கடந்த 12 ஆண்டுகளாக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடைசியாக 2008-ம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகை அணை

    அணையில் இருந்து கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் 120 நாட்களுக்கு திறந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் 1797 ஏக்கர் நிலமும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16452 ஏக்கர் நிலமும், மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள 26792 ஏக்கர் என மொத்ம் 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    கடந்த ஆண்டு இதே நாளில் வைகை அணையின் நீர்மட்டம் 45 அடிக்கு கீழ் இருந்த நிலையில் தற்போது நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    Next Story
    ×