search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
    X
    விபத்தில் கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    கார்கள் நேருக்கு நேர் மோதல்- தந்தையுடன் புதுமாப்பிள்ளை பலி

    கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தந்தை பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கரூர்:

    திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 50). இவரது மனைவி பாக்கியம் (48), மகன் பிரசாந்த் (29), மருமகள் நிர்மலா (21). இதில் பிரசாந்த்-நிர்மலாவிற்கு கடந்த 17-ந்தேதி திருமணம் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லாததால் அவர்கள் அனைவரும் கோவையில் இருந்துள்ளனர்.

    தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் நேற்று காலை கோவையில் இருந்து கரூர் மாவட்டம், குளித்தலை வழியாக திருச்சிக்கு ஒரு காரில் குமரவேல் உள்பட 4 பேரும் வந்து கொண்டிருந்தனர். அந்த கார் நேற்று மதியம் குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அதே சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் குமரவேல் உள்பட 4 பேர் வந்த காரின் மீதும், அதன் பின்னால் வந்த மற்றொரு காரின் மீதும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி குமரவேல், பாக்கியம், பிரசாந்த், நிர்மலா ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல், பிரசாந்த் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    பாக்கியம், நிர்மலா ஆகியோருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றொரு விபத்து

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 41). இவர், அப்பகுதியில் பெயிண்ட் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று அருள்தாசின் உறவினர் திருமணம் திருச்சியில் நடந்தது. அதற்காக அருள்தாஸ், அவரது மனைவி ஆரோக்கிய மலர்விழி (38), மகள்கள் டெலிசா (9), டெபேலா (6) மற்றும் அவர்களது உறவினர்களான கடுக்காகாடு கிராமத்தை சேர்ந்த மார்ட்டின்ராஜ் மனைவி லேனாபால் இனிகோமேரி (38), ஆலங்காபட்டி கிராமத்தை சேர்ந்த வில்சன் மனைவி சோபியா (32) ஆகிய 6 பேரும் கருக்காகாட்டிலிருந்து நேற்று காலை அருள்தாசுக்கு சொந்தமான காரில் புறப்பட்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். காரை அருள்தாஸ் ஓட்டினார்.

    கார் காலை 10.45 மணி அளவில் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் உள்ள மாத்தூர் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ராஜா (29) என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேனின் பின்புற சக்கரம் திடீரென கழன்று அருள்தாஸ் ஓட்டிச்சென்ற காரை நோக்கி வந்தது.

    அப்போது அதை கவனித்த அருள்தாஸ் சக்கரம், கார் மீது வந்து மோதாமல் இருப்பதற்காக திடீரென காரை வலது பக்கம் திருப்பினார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மறுபுறம் சென்று தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. சரக்கு வேன் சக்கரம் கழன்றதையடுத்து டிரைவர் சரக்கு வேனை அதே இடத்தில் நிறுத்தினார்.

    இந்த விபத்தில் காரில் இருந்த அனைவரும் காருக்குள்ளேயே சிக்கினர். இதில் ஆரோக்கிய மலர்விழி, லேனாபால் இனிக்கோமேரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்தில் படுகாயமடைந்த அருள்தாஸ், டெலிசா, டேபேலா, சோபியா ஆகிய 4 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×