search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்தபடி ஓடிய காட்சி.
    X
    கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்தபடி ஓடிய காட்சி.

    பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

    கச்சிராயப்பாளையம் அருகே பெண் போலீஸ் வீட்டில் 27½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கச்சிராயப்பாளையம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே சடையம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவருடைய மனைவி வள்ளி (வயது 55). இவர்களுக்கு சுதாகர் என்கிற மகனும், தாவாயி, சித்ரா, ஆனந்தி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    இதில் ஆனந்தி விழுப்புரம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் விஜயசாரதி என்பவரும் போலீஸ்காரர் ஆவார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வள்ளி வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு வள்ளி தனது 2-வது மகள் சித்ராவுடன் தூங்கினார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் வள்ளி, சித்ரா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து கொண்டிருந்தனர். இந்த சத்தம் கேட்டு வள்ளியும், சித்ராவும் திடுக்கிட்டு எழுந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையை விட்டு வெளியே வர முயன்றபோது, கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் மர்மநபர்கள் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் உள்ள பீரோவை உடைத்து கொள்ளையடித்து கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அந்த அறையி்ன் பின்புற கதவை திறந்து வெளியே சென்று அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர்.

    அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் பீரோவில் இருந்த 27½ பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம், 300 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை போன நகையின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய சப்-இன்ஸ்பெக்டர்கள், நரசி்ம்மஜோதி, வினோத்குமார் ஆகியோர் தலைமையில 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெண் போலீஸ் வீட்டில் மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×