search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெம்டெசிவிர் மருந்து
    X
    ரெம்டெசிவிர் மருந்து

    ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை: மு.க.ஸ்டாலின் உத்தரவால் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

    சென்னை:

    கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதற்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.

    உடலில் ஆக்சிஜன் அளவு குறையும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதனால் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது.

    இந்த இக்கட்டான நெருக்கடி சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தும், ஆக்சிஜன் சிலிண்டரும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உயிர் காக்கும் இந்த பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பவர்களை போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனினும் ரகசியமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பவர்கள்மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் துறைக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    மு.க.ஸ்டாலின்

    இதுகுறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மை கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராக செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

    உலகளாவிய அளவிலும், குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் கொரோனா 2-வது அலை ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள் தோறும் அதிகரித்து வரும் நோய்த் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    மக்களுக்கான இந்த அரசு இரவு-பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கேற்ப, நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

    எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

    அதுபோலவே ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும்.

    தடுப்பு மருந்து இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து வினியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக, ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதன் காரணமாக ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் யாராவது விற்கிறார்களா? என்பதை கண்டறிய போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×