search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

    தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    சென்னை

    தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும், கத்தரி வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் அரபிக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

    அதன்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (புதன்கிழமை), வியாழக்கிழமை (நாளையும்) மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, வருகிற 14-ந் தேதி (நாளை மறுதினம்) தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது எனவும், இதன் காரணமாக நாளை மறுதினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    வானிலை ஆய்வு மையம்

    அதேபோல், 15-ந் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் இன்றும், நாளையும் அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்திலும், 14 மற்றும் 15-ந் தேதிகளில் 50 முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
    Next Story
    ×