search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் உத்தரவு

    மாணவர்கள் கூறிய முறைகேடு புகாரை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    சென்னை :

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 2020-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் தேர்வாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் முறைகேடுகளும், தங்களுக்கு பல்வேறு சிரமங்களும் ஏற்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள் முறையிட்டனர். நன்றாக படிக்கும் சில மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முடிவுகளை எடுத்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    * கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்.

    * இந்த தேர்வுக்கு மாணவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

    * பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம்.

    * இத்தேர்வு 3 மணி நேர ஆன்-லைன் தேர்வாக நடைபெறும். பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாள்கள் முறையே கடைபிடிக்கப்படும். இத்தேர்வுகள், தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும்.

    * வருகிற ஏப்ரல்-மே செமஸ்டர் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

    பிற பல்கலைக்கழகங்களில் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வு வருகிற 25-ந்தேதி முதல் தொடர்ந்து நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே வெளியிடும். மாணவர்கள் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×