search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துரை மருத்துவகல்லூரிக்கு வெளியே ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள்
    X
    துரை மருத்துவகல்லூரிக்கு வெளியே ரெம்டெசிவிர் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள்

    மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவியும் மக்கள்

    மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வெளிமாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். 83 பேருக்கே மருந்துகள் கிடைப்பதால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
    மதுரை:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை மிக தீவிரமாக இருக்கிறது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது.

    சென்னையில் பாதிப்புடன் உயிரிழப்பு அதிகமானதை தொடர்ந்து கீழப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டது. மதுரையிலும் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த 8-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் நாளில் பெரும்பாலானோர் ரெம்டெசிவிர் மருந்து வாங்க ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆனால், மறுநாளில் மருந்து வாங்க ஏராளமானோர் திரண்டனர்.

    இந்த நிலையில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்றுமுன்தினம் இரவு முதலே மருத்துவ கல்லூரி அருகே கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர். அவர்களில் 83 பேருக்கு மட்டுமே நேற்று மருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இது குறித்து அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், “மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு தினமும் 500 ரெம்டெசிவிர் மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் மருந்தின் தேவை அதிகமாக இருப்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் கூட்டமாக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் முன் கூட்டியே டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மருந்து வினியோகிக்கப்படும்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு தினமும் 7 ஆயிரம் மருந்துகளை கொடுக்கிறது. அந்த மருந்துகள் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 இடங்களுக்கு பாதிப்பை பொறுத்தும், நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தும் பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடையின்றி ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. விற்பனை மையங்களுக்கு அதிகம் வழங்குவதை காட்டிலும், அரசு ஆஸ்பத்திரிக்கு அதிக அளவு மருந்துகள் வழங்க வேண்டியது அவசியமானதாகும். எனவே கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வேண்டும்” என்றார்.
    Next Story
    ×