search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு அலுவலரிடம் மனுக்களை ஒப்படைத்த முதல்வர் ஸ்டாலின்
    X
    சிறப்பு அலுவலரிடம் மனுக்களை ஒப்படைத்த முதல்வர் ஸ்டாலின்

    'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை -மு.க.ஸ்டாலின் உறுதி

    தனி நபர் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, முடிந்த அளவு விரைவாக அவர்களது மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சாத்தியமானவை அனைத்திற்கும் உடனடித் தீர்வு காணப்படும் என முதல்வர் கூறி உள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, நான் மாவட்டந்தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின்கீழ், அவர்களின் பொதுவான அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட குறைகள் குறித்து மனுக்களைப் பெற்றேன். திமுக ஆட்சி அமைந்தவுடன், அவற்றைப் பரிசீலித்து, பதவியேற்ற 100 நாட்களில் நிறைவேற்றித் தரப்படும் என்று அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அன்றே கையொப்பமிட்ட 5 கோப்புகளில் ஒன்றாக, இப்பணிக்கென 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை அறிவித்து, அதற்கென தனித் துறையை உருவாக்கி, அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷை நியமித்தேன்.

    அந்தச் சிறப்புப் பணி அலுவலரிடம் இன்று (8-5-2021) அந்த மனுக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டன. இந்தப் பிரிவில் பெறப்பட்ட மனுக்களையெல்லாம் ஆய்வு செய்து, அவற்றை உட்கட்டமைப்பு (புதிய சாலைகள், மேம்பாலங்கள் போன்றவை), சமூக சொத்துக்கள் (பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை) மற்றும் தனிப்பட்ட நபர்களின் கோரிக்கைகள் என மூன்றாகப் பிரித்துக் கொள்ளப்படும். 

    பின்னர் சம்பந்தப்பட்ட துறைக்கு அவை அனுப்பப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்படும். இந்தப் பணிகள் நடைபெறும் போதும், முடிவுறும் போதும், அவை தகுந்த முறையில் ஆவணப்படுத்தப்படும். இந்தப் பிரிவிற்கென ஒரு இணையதளம் துவக்கப்பட்டு, அதில் மனுக்களின்மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரம் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்யப்படும்.

    சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ்

    தனி நபர் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, முடிந்த அளவு விரைவாக அவர்களது மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சாத்தியமானவை அனைத்திற்கும் உடனடித் தீர்வும், முடியாதவற்றிற்கு என்ன காரணத்தினால் கோரிக்கை நிறைவேற்ற இயலவில்லை என்ற தெளிவான காரணமும் அளிக்கப்படும். மேலும், அவர்கள் அதுகுறித்து தொடர்ந்து மனு செய்வதைத் தவிர்க்கும் வகையில், மாற்று வழியில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள வழிகாட்டுதல்கள் தரப்படும்.

    தமிழக அரசைப் பொறுத்தவரையில், இந்த மனுக்களின் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தான் நோக்கம். ஆனால், இப்போது கொரோனா என்ற கொடுந்தொற்று நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு நிர்வாகம் பெருமளவில் இதற்கென முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, அடிபட்ட பாகத்திற்கு உடல் அதிக இரத்தத்தைச் செலுத்துவதைப் போல், நாம் நிர்வாகத்தின் மொத்த கவனத்தையும் கொரோனா மீது செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, அளிக்கப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும், கொரோனா காலம் என்பதால் இயன்றவரை மக்களின் தேவைக்கேற்ப சிறப்பாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்; அவற்றிற்குத் தீர்வும் காணப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட வேண்டுமென்ற அடிப்படையில் தான், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு துறை இதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறேன். இந்தக் கோரிக்கைகளை எந்தத் துறையின் மூலம் நிறைவேற்றலாம் என்பதைத் தீர்மானித்து, உரிய நடவடிக்கை எடுப்பதைக் கண்காணிக்கவும், அதன் விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டுமென இத்துறைக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலருக்கு அறிவுரை வழங்கியுள்ளேன் என்பதை மனுக்களை அளித்த மக்கள் அனைவருக்கும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×