search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    அமைச்சகங்களின் பெயர் மாற்றம் ஏன்? - முக ஸ்டாலின் விளக்கம்

    மு.க. ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை பதவியேற்கும் தமிழக அமைச்சரவையில் மொத்தம் 34 பேர் இடம்பெறுகிறார்கள்.
    சென்னை:

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.கவை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் புதிய அரசு, நாளை காலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மு.க.ஸ்டாலினுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் வெளியானது.

    34 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவையில் 2 பெண்களும் 2 சிறுபான்மையினரும் இடம்பெற்றுள்ளனர்.  நிதித்துறை அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் பழனிவேல் தியாகராஜன், சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்கும் மா. சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் முதன்முறையாக அமைச்சரவையில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் சில துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அதற்கான காரணத்தை விளக்கி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் லட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் 'நீர்வளத் துறை' என்று அழைக்கப்படும். உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும்.

    வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் 'வேளாண்மை - உழவர் நலத்துறை' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.

    தமிழக அரசு

    சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் 'சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை' என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.

    மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் 'மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை' என்று பெயர் சூட்டப்படுகிறது.

    மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் மீன்வளத்துறை 'மீன்வளம் - மீனவர் நலத்துறை' என்று அழைக்கப்படுகிறது.

    தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை உள்ளடக்கி இருப்பதால் அத்துறை 'தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை' என்று பெயரிடப்படுகிறது.

    செய்தி - மக்கள் தொடர்புத் துறை 'செய்தித் துறை'யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது.

    சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. என்பதால் 'சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை' என்று வழங்கப்படவுள்ளது.

    பணியாளர் என்கிற பதம் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை 'மனித வள மேலாண்மைத் துறை' என்று அழைக்கப்பட உள்ளது.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை வெளிநாடு வாழ் தமிழர் நலன் என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டுசேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.

    உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×