search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாளை ஜெயிலில் கைதி கொலை: கைதான 7 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு

    பாளை ஜெயிலில் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான 7 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமனோ (வயது27).

    வழக்கு ஒன்றில் கைதான இவரை கடந்த 22-ந்தேதி பாளை ஜெயிலில் 7 கைதிகள் ஒன்றாக சேர்ந்து கல்லால் தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த முத்து மனோ நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 7 கைதிகளை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் பாளை சிறை அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவரது உறவினர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தார்கள்.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பாளை சிறை அதிகாரிகள் மற்றும் சிறை காவலர்கள் 6 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

    இந்த நிலையில் போலீஸ் அதிகாரிகள், முத்துமனோ மனோவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மதுரை ஐகோர்ட்டும் விசாரணை அறிக்கை முழுவதையும் தாக்கல் செய்யவும், உடலை உறவினரிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து முத்து மனோவின் உறவினர்கள் இன்று அவரது உடலை பெற்று முறைப்படி இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்தனர்.

    இதற்காக அவரது உறவினர்கள் இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள முத்து மனோவின் உடலை பெற்று செல்கிறார்கள்.

    முத்துமனோவின் வழக்கு நேற்று முறைப்படி சி.பி.சி. ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. அனில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கி 7 கைதிகள் மீதும் 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். டி.எஸ்.பி.யுடன், இன்ஸ்பெக்டர் பிரைசந்திரன் மற்றும் போலீசார் இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்த உள்ளார்கள்.

    பாளை ஜெயிலில் உள்ள சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, கைது செய்யப்பட்ட கைதிகளையும் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×