search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலைவாணன்- கவியரசன்
    X
    கலைவாணன்- கவியரசன்

    லால்குடி அருகே என்ஜினீயர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

    லால்குடி அருகே என்ஜினீயர் கொலை வழக்கில் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் 2 பேர் சரண் அடைந்தனர்.
    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் கிருபன்ராஜ்(வயது 27). சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பிரிவில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராபின்ஷாமேரி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    அதே பகுதியை சேர்ந்த சித்தார்த்தின் மகன் கவியரசனும், கிருபன்ராஜும் நெருங்கிய நண்பர்கள். கிருபன்ராஜின் தங்கை கிரிஜாவை கவியரசன் காதலித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிஜாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்து இருந்தனர்.

    ஆனால் திருமணத்துக்கு முன் கிரிஜா, கவியரசனுடன் வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது கிருபன்ராஜுக்கு பிடிக்காததால், அவருக்கும், கவியரசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த கிருபன்ராஜ், நேற்று முன்தினம் காலை தனது மோட்டார் சைக்கிளில் கவியரசன் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அங்கு அவரை கவியரசனும், அவருடைய 2 சகோதரர்களும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருபன்ராஜை, கவியரசன் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவியரசன் மற்றும் அவருடைய 2 சகோதரர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் கவியரசன், அவரது தம்பி கலைவாணன் ஆகியோர் சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிவாஷை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×