search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாடு பகுதி
    X
    கட்டுப்பாடு பகுதி

    கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம்- மத்திய அரசு

    அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
    சென்னை:

    நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடுகிறது.

    முதல்முறையாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3½ லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 66 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் 35 ஆயிரத்து 311 பேரும், கர்நாடகாவில் 34 ஆயிரத்து 804 பேரும் ஒரேநாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 684 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கோவில்கள், தியேட்டர்கள், சலூன் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல கட்டுப்பாடுகளும் தமிழகத்தில் உள்ளன.

    கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் 10 சதவீதத்தை தாண்டினாலோ அல்லது ஆக்சிஜன் படுக்கை வசதியில் 60 சதவீதம் நிரம்பினாலோ அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தலாம்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தடுக்க வேண்டும். சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசாரம், ஆன்மிகம், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது. திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

    பெரிய மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள், மதுபான பார்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆன்மிக தலங்களை மூடலாம். இரவுநேர ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்தலாம்.

    சுகாதார சேவைகள், போலீஸ், தீயணைப்பு, வங்கி, மின்சாரம், குடிநீர், தூய்மை பணி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ரெயில், மெட்ரோ ரெயில், பேருந்து, வாடகை கார்களில் 50 சதவீத பயணிகளை அனுமதிக்கலாம்.

    அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் வரை கடும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

    கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளூர் மொழியில் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சேவையாற்ற தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களை பயன்படுத்தலாம்.

    கொரோனா வைரஸ்

    வீடுவீடாக சென்று கொரோனா கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைபடுத்த வேண்டும்.

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வகையில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதிக அளவில் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்த துண்டுப்பிரசுரத்தை வழங்க வேண்டும். முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

    அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 98 சதவீதம் பேர் குணம் அடைந்து வருகிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×