search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம்- தலைவர்கள் கருத்து

    அவசர தேவை கருதி ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறின.
    சென்னை:

    கொரோனா தொற்று 2-ம் அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

    இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளில் பலருக்கு கடுமையான சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கவலைப்படும் வகையில் அதிகரித்து வருகிறது.

    மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் கொரோனா நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்துக்கான ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைப்பது தாமதம் ஆகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    தமிழகத்தில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் தமிழகத்துக்கு தேவை இருப்பதால் தமிழகத்தில் இருந்து ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தநிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் ஆக்சிஜனை தயாரித்து தருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. இதற்காக அனுமதி பெற அந்த நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    தூத்துக்குடி மக்களும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது பற்றி தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திங்கட்கிழமை (இன்று) எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி இருந்தது.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக எத்தகைய முடிவை எடுக்கலாம் என்பது பற்றி தீர்மானிக்க எடப்பாடி பழனிசாமி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அனைத்துக் கட்சிக்கூட்டம் தொடங்கியது.

    கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் கலந்து கொண்டனர். தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, பா.ஜ.க. சார்பில் முருகன், கே.டி.ராகவன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, ஜெயக்குமார் பங்கேற்றனர்.

    ஆர்எஸ் பாரதி, கனிமொழி

    பா.ம.க. சார்பில் துணை பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன், தே.மு.தி,க. சார்பில் பாலாஜி, அன்புராஜ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ் ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூ. கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்தர் ரெட்டி, அதுல்ய மிஸ்ரா, பொதுத்துறை செயலாளர் செந்தில் குமார் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அங்கீகரிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

    கூட்டத்தில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ள யோசனை குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களின் கருத்துக்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார்.

    ஒவ்வொரு கட்சி சார்பிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் ஏற்படும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

    தூத்துக்குடி பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் என்று கூறிவருவதால் அதற்கு மாறாக ஆலையை திறந்தால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும் என்பதையும் வெளிப்படுத்தினார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய யோசனை குறித்தும் இந்த கூட்டத்தில் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

    எனவே இதுபற்றி அரசின் நிலைப்பாட்டை சுப்ரீம் கோர்ட்டில் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சி சார்பிலும் கேட்டுக் கொண்டனர்.

    அவசர தேவை கருதி ஸ்டெர்லைட்டின் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறின. தி.மு.க. சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஆர்.எஸ். பாரதி எம்.பி. ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலையில் தேவை கருதி ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம். ஆனால் அங்கு ஆக்சிஜன் உற்பத்தி தவிர வேறு எந்த உற்பத்தியும் நடக்கக் கூடாது என்று கூறினார்கள். இதே கருத்தை காங்கிரசும் கூறியது.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது, ‘‘மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கொடுக்கலாம்’’ என்று கூறினார்.

    ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு பா.ஜ.க. தனது ஆதரவை தெரிவித்தது. இதேபோல பல கட்சிகளும் உற்பத்தியை தொடங்க ஆதரவு தெரிவித்தன. ஆனாலும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பினார்கள்.

    ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமே நடக்கும் என்பதை கண்காணிப்பதற்கு அனைத்து கட்சிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதில் கலெக்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் இடம் பெற வேண்டும். அவர்கள் முழுமையாக தொழிற்சாலையை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதை தொடர்ந்து இறுதி கட்ட முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உடனடியாக அட்வகேட் ஜெனரல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×