search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் புழுக்கம்-வியர்வை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    நாளை (24-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

    கோப்புப்படம்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

    காற்றில் நீரின் அளவு கூடுவதால் இந்த விளைவு ஏற்படுகிறது. இந்த மாதம் முழுவதும் வெக்கை- புழுக்கம் அதிகமாக இருக்கும். வெப்பநிலை அதிகம் இல்லாத நிலையில் வெக்கை அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×