search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையங்கோட்டை சிறை
    X
    பாளையங்கோட்டை சிறை

    பாளையங்கோட்டை சிறையில் மோதல்: காயமடைந்த விசாரணை கைதி பலி

    பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் கைதிகளுக்குள் நிகழ்ந்த மோதலில் காயமடைந்த விசாரணை கைதி உயிரிழந்தார்.
    திருநெல்வேலி:

    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்பட சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக விசாரணை கைதிகள் பல்வேறு கிளைச் சிறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பின்பு மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

    அதன்படி நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சேர்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ (27) என்ற விசாரணை கைதியை ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் தனிமைப்படுத்தியிருந்தனர்.

    பின்னர் அங்கிருந்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு போலீசார் இன்று அழைத்து வந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட முத்துமனோவுக்கும், சில கைதிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடைந்த முத்துமனோவை சிறை காவலர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    Next Story
    ×