search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முகக்கவசம்
    X
    முகக்கவசம்

    பஸ் பயணத்தில் முகக்கவசம் அணியாமல் மக்கள் அலட்சியம்- கொரோனா மேலும் பரவும் அபாயம்

    பஸ் பயணத்தில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்படும் நிலையே உள்ளது. இதனை டிரைவர் மற்றும் கண்டக்டர் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பஸ் போக்குவரத்தின்போது பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் பயணம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால் அரசின் இந்த உத்தரவு தற்போது காற்றில் பறந்துள்ளது. சென்னை மாநகர பஸ்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.

    நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பல வழிதடங்களில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடைபிடிப்பதில்லை. கூட்டமாக பொதுமக்கள் பஸ்களில் நின்று பயணித்து வருகிறார்கள்.

    இதில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக செயல்படும் நிலையே உள்ளது. இதனை டிரைவர் மற்றும் கண்டக்டர் கண்டுகொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சென்னையில் தினமும் 3,300 மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் சராசரியாக 34 லட்சம் பேர் பயணித்து வருகிறார்கள். இந்த பஸ்களில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பஸ் பயணிகளிடம் மட்டும் இதுவரை ரூ.21 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர்.

    இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    இதே போன்று மற்ற பொது போக்குவரத்துகளிலும் கொரோனா வழிபாட்டு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. கார்- ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் சுமார் 1 லட்சம் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இருப்பினும் சில இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் இதனை கடைபிடிப்பதில்லை. 2 பேருக்கு மேல் மொத்தமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வதையும் காண முடிகிறது. இது போன்ற நேரங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் பயணிக்கும் நிலையும் உள்ளது.

    இதே போன்று வாடகை கார்களிலும் பல இடங்களில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதன் மூலம் கொரோனா பரவல் மேலும் அதிகரித்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொது போக்குவரத்தின்போது பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூடுதல் விழிப்புணர்வையும், கண்காணிப்பையும் அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாக மாறியுள்ளது.

    எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பயணிகள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    Next Story
    ×