search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளையர்கள் விட்டு சென்ற கார்.
    X
    கொள்ளையர்கள் விட்டு சென்ற கார்.

    திண்டிவனம் அருகே வீடு புகுந்து துப்பாக்கி முனையில் நகை கொள்ளை

    அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற வரதராஜ் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த முகமூடி கும்பல் அவரது குடும்பத்தினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த எல்.இ.டி. டி.வி.யை தூக்கி சென்றனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 53). இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்ததது. அந்த கும்பல் காரில் இருந்து துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பிலவேந்திரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றது.

    கதவை உடைக்கும் சத்தம்கேட்டு பிலவேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி கும்பல் வீட்டுக்குள் வந்திருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே அவர்கள் திருடன்... திருடன்... என அலறினர். உடனே அந்த கும்பல் துப்பாக்கியை காட்டி பிலவேந்திரன் குடும்பத்தினரை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி தருமாறு கூறியது அதற்கு பிலவேந்திரன் குடும்பத்தினர் மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பிலவேந்திரன் மற்றும் அவரது மகன் அருண்குமார் (31) ஆகிய 2 பேரையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. அதன் பிறகு அவர்களிடம் இருந்து 2 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் பறித்தது. வீட்டில் வேறு எதுவும் பொருட்கள் சிக்காததால் அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றது.

    அந்த கும்பல் அங்கிருந்து மயிலம் ஜக்காம்பேட்டை பகுதிக்கு காரில் சென்றது. அந்த பகுதியில் குமார் (24) என்பவரின் வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியது.

    அதே பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற வரதராஜ் என்பவரின் வீட்டிற்குள் அந்த கும்பல் புகுந்தது. வீட்டில் இருந்த வரதராஜ் குடும்பத்தினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த எல்.இ.டி. டி.வி.யை தூக்கி சென்றது.

    பின்னர் அதே பகுதியில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளிஊருக்கு சென்றிருந்தனர். அந்த வீட்டில் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    இதையடுத்து மயிலம் கண்ணிகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அ.தி.மு.க. கிளை செயலாளர் ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் அந்த கும்பல் சென்றது. அப்போது திடுக்கிட்டு எழுந்த ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருடன்... திருடன்... என்று அலறினர்.

    இந்த சத்தம்கேட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்களை கண்டதும் அந்த முகமூடிகும்பலை சேர்ந்த 4 பேரும் அவர்கள் திருடிவந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    போலீசார் விசாரணை

    அந்த கொள்ளை கும்பல் கொண்டுவந்த காரையும், வரதராஜன் வீட்டில் திருடிய எல்.இ.டி. டி.வி.யையும் அந்த பகுதியில் விட்டுவிட்டு சென்றது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மயிலம் மற்றும் திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் விட்டு சென்ற காரை போலீசார் பார்வையிட்டனர். அந்த காரில் பதிவு எண் இல்லை. பல்வேறு வீடுகளுக்குள் புகுந்து நகை மற்றும் பொருட்களை திருடிசென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



    Next Story
    ×