search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

    உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வருகிற 24-ந்தேதி மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு நடக்கிறது. இதைக்கான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யான நிகழ்வை காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதிதிக்கு விஜயமும், 24-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந்தேதி தேர் திருவிழாவும் நடைபெறும்.

    அதேபோன்று அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் 26-ந்தேதி எதிர்சேவையும், 27-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்க இருந்தன. அதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை தீவிரமாக உள்ளதால் வழிபாட்டு தலங்களில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதைத் தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டைப் போல் ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று பக்தர்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் கோவில் அதிகாரிகள், பட்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த 9-ந்தேதி மாலை நடந்தது.

    இக்கூட்டத்தில் திருவிழா நடத்துவது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திருவிழா நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தின் முடிவில் கலெக்டர் அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா பரவல் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது. எனவேதான் கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.” என்றார்.

    கோப்புப்படம்

    ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது எல்லாம் அரசு எவ்வித கட்டுப்பாடும் விதிக்காமல் தேர்தல் முடிந்த பிறகு திருவிழாக்களுக்கு தடைவிதித்தது பக்தர்களை பெரிதும் வேதனைக்குள்ளாக்கி இருக்கிறது.

    எனவே இந்த ஆண்டாவது கண்டிப்பாக திருவிழாவை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×