search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று நாடகமாடிய டிரைவர் கைது

    திண்டுக்கல் அருகே கள்ளக்காதலியை எரித்து கொன்று நாடகமாடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த செந்தில்மணி. இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 29-ந் தேதி ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ரஞ்சிதா மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது தந்தை வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ரஞ்சிதாவின் செல்போன் எண்ணை வைத்து சோதனை செய்ததில் அவர் கடைசியாக குஜிலியம்பாறை அருகில் உள்ள ஆர்.புதுக்கோட்டையச் சேர்ந்த லாரி டிரைவரான ராஜ்குமார் (30) என்பவரிடம் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது.

    இதனையடுத்து ராஜ்குமாரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவர் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து ராஜ்குமார் தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். இது குறித்து அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் ரஞ்சிதாவுக்கும் திருமணத்துக்கு முன்பு இருந்தே பழக்கம் இருந்தது. இதனால் எங்களை பிரித்து ரஞ்சிதாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து விட்டனர். அதன் பிறகு நான் வேறு பெண்ணை திருமணம் செய்து எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இருந்த போதும் நானும் ரஞ்சிதாவும் தொடர்ந்து பேசி தனிமையில் சந்தித்து வந்தோம். எங்கள் பழக்கம் எனது மனைவிக்கு தெரிய வரவே அவர் கண்டித்தார். இதனையடுத்து நாங்கள் 2 பேரும் புதிய சிம் கார்டுகள் வாங்கி அதன் மூலம் பேசி வந்தோம். கடந்த 29-ந் தேதி அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக போன் செய்து அழைத்தேன். அப்போது நான் அதிகமாக மது குடித்திருந்தேன். எனது பைக்கில் ரஞ்சிதாவை இடையகோட்டை ரோட்டில் உள்ள ரெங்கமலை காட்டு பகுதிக்கு அழைத்து வந்தேன். அங்கு ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருக்க முயன்றேன். அப்போது திடீரென என்னுடன் அவர் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்து அவரை நான் தாக்கினேன். ரஞ்சிதா மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே நான் பதட்டமடைந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். எனது பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றினேன். பின்னர் அவரை எரித்து கொன்று விட்டு அங்கிருந்து வந்து விட்டேன். போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க எப்போதும் போல் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தேன் என்றார்.

    இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கே சிதறி கிடந்த ரஞ்சிதாவின் ஆடைகள் மற்றும் எரிந்த நிலையில் கிடந்த எலும்பு கூடின் பாகங்களை கைப்பற்றினர். இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×